"சின்னதிரை கலைஞர்களுக்கென்று ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் 02.11.2003 அன்று சின்னதிரை நடிகர் சங்கம், மறைந்தும், மறையாமலும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற திரு.S.N.வஸந்த் அவர்களின் முயற்சியிலும் பலரது ஆதரவாலும் பத்மாராம் மண்டபத்தில் துவங்கப்பட்டது. அது இன்று சின்னதிரை கலை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து தன் உறுப்பினர்களுக்காக வெற்றிகரமாக தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளையும், முன்னணி கலைஞர்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் கொண்டு, நமது சட்டதிட்டங்கள், அதன் நோக்கங்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டு சங்கம் தன் பணியினை செவ்வனே செய்து வருகிறது. சங்க உறுப்பினர்களுக்குத் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து சுமூகமாக தீர்த்து வைத்தல், ஊதியம் பெற்றுத் தருதல், நம் உறுப்பினர்களின் வாழ்வு வளம் பெற வழிவகுத்தல் போன்றவற்றோடு பிற நல்ல நோக்கங்களுக்காகவும் சின்னதிரை நடிகர் சங்கம் இயங்கி வருகிறது.

வரும் ஆண்டுகளில் சின்னதிரை நடிகர் சங்கத்திற்கு என்று சொந்த கட்டிடம் உருவாக்கவும் வருமானத்தைப் பெருக்கவும் அந்த வருமானத்தைக் கொண்டு உறுப்பினர்களுக்கு மேலும் பல உதவிகள் செய்திடவும் தலைவர் திரு.ரவிவர்மா அவர்களின் நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. விரைவில் நம் உறுப்பினர்களின் லட்சிய கனவான சொந்த கட்டிடம் நிறைவேறும்.

நமது சின்னதிரை நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், எந்த இடையூறுகள் வந்தாலும் சங்கத்தின் நலன் மற்றும் உறுப்பினர்களின் நலன் காக்கபட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் செவ்வனே செயலாற்றி வரும் தலைவர் திரு.அ.ரவிவர்மா அவர்களின் தலைமை சங்கத்திற்கு கிடைக்கப் பெற்ற வரம்.

உலகமே ஸ்தம்பித்து ஒடுங்கி இருந்த கொரானா காலகட்டத்தில், சின்னதிரை நடிகர் சங்கம், தன் உறுப்பினர்களின் நலனுக்காக தலைவர் திரு.ரவிவர்மா அவர்களின் தலைமையில், சங்க நிர்வாகம் ஆற்றிய தொண்டுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது. தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது திரு.ரவிவர்மா அவர்களின் தலைமையில் எண்ணற்ற உதவிகளை உறுப்பினர்களின் நன்மைக்காக சங்கம் செய்ததை சின்னதிரை மற்றும் வெள்ளித்திரை சார்ந்த அனைவரும் பாராட்டினார்கள்.

மேலும் உறுப்பினர்களின் தொழில் நலன் மேம்பட திரு.ரவிவர்மா அவர்கள் தலைமையிலான நிர்வாகம் எந்தவித தொய்வின்றி தொடர்ந்து செயல்படும்.

உங்களுடைய அன்பும், ஆதரவும், வாழ்த்துக்களும் என்றென்றும் எங்களுக்கு வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்."